Description
இது ஒரு ஆன்மீக அழைப்பு
இன்றைய உலகம் அனைத்திலும் உச்ச கட்டத்தில் நிற்கிறது. வேகம், சத்தம், அளவில்லா ஆசைகள் சூழ, மனித மனம் வெளிப்புறச் சாதனைகளின் ஒளியில் தன்னை மறந்து மயங்கிக் கிடக்கிறது. செல்வம் மகிழ்ச்சியென வாக்குறுதி அளிக்கிறது. அதிகாரம் பாதுகாப்பென தோன்றுகிறது. ஆனால் உள்ளத்தின் ஆழத்தில் அமைதி இன்னும் தேடலாகவே உள்ளது. இந்த முடிவற்ற ஓட்டத்தில், மனிதன் தன் உள்ளேயே வாசம் செய்யும் தெய்வீக நினைவிலிருந்து மெதுவாக விலகிச் சென்றுவிட்டான்.
நாகரிகம் வெளியில் வளர்ந்துள்ளது; ஆனால் ஞானம் உள்ளே வளரவில்லை. இயந்திரங்கள் வலிமை பெற்ற அளவிற்கு, மனிதனின் ஒழுக்கம் வலுவிழந்து வருகிறது. உள்ளார்ந்த நோக்கத்தை இழந்த வாழ்க்கை, திசையற்ற பயணமாக மாறி, பேராசை வழிகாட்டியாக, பயம் துணையாக, திருப்தியின்மை நிழலாக மனிதனை இழுத்துச் செல்கிறது. கட்டுப்பாடு தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. சுயகட்டுப்பாடு மறக்கப்படுகிறது. தியாகம் என்ற புனித இலக்கு மங்கித் தொலைகிறது. ஆன்மாவின் உயிரோட்டமின்றி, மதம் வெறும் வெளிப்புற வடிவமாக மட்டுமே மிஞ்சுகிறது.
மனிதன் கடல்களையும் வானங்களையும் வென்றான். அணுவை பிளந்து. நட்சத்திரங்களை எண்ணினான். ஆனால் மிகப் பெரிய மர்மம் இன்னும் தீர்க்கப்படவில்லை- அதாவது, அவனுடைய ஆத்மாவின் மர்மம். வெளிப்புற உலகை வென்றாலும், உள்ளார்ந்த உலகை அவன் வெல்லவில்லை. அமைதியற்ற மனமே அவனுடைய மிகப் பெரிய பகையாக இன்னும் நிற்கிறது.
ஒழுக்கமற்ற அறிவும், ஆன்மீகமற்ற ஞானமும் வரப்பிரசாதமல்ல-அவை ஆபத்து. அறநெறியுடன் இணைக்கப்படாத அறிவு அமைதியைப் பிறப்பிக்காது. குழப்பத்தையும் துயரத்தையும் மட்டுமே வளர்க்கும். போர், கலகம், உள்ளார்ந்த வெறுமை இவைகளால் அதிரும் இக்காலத்தில், நிலையான அறநெறி மற்றும் ஆன்மீக மதிப்புகளை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டிய அவசர அழைப்பு எழுகிறது. இத்தகைய தருணத்தில், யோகம் மற்றும் வேதாந்தம் என்ற நித்திய ஞானம் ஒளிக்கீற்றாகத் தோன்றுகிறது. அவை உலகை விலக்கச் சொல்லவில்லை; உலகில் வாழும் முறையையே உயர்த்துகின்றன.
சிந்தனை சுத்தமடைய, செயல் உயர்வடைய, மனித வாழ்க்கையின் உயர்ந்த உண்மையின் வெளிப்பாடாக மாறும் வழியை அவை காட்டுகின்றன. யோகம் மற்றும் வேதாந்தம் உண்மையில் ஒன்றே- தத்துவமும் சாதனையும் இணைந்து ஆத்ம சாக்ஷாத்காரத்திற்குத் துணை நிற்கின்றன.
ஆசிர்வாதத்தின் அற்புதம் (Sheer Blessings) இந்நோக்கத்திலேயே வழங்கப்படுகிறது. இது எமது சுவாமி நித்தியானந்த சரஸ்வதி மகாராஜர் பல்வேறு சத்சங்கங்களிலும், ஆன்மீக பயிற்சி முகாம்களிலும், தியான வகுப்புகளிலும், நிகழ்த்திய சொற்பொழிவுகள் மற்றும் வழிகாட்டல்களின் தொகுப்பாகவும் அதேவேளை வாசகர்களுக்கு இலகுவாகப் புரியும் வகையில் இரத்தினச் சுருக்கமாகவும் வழங்கப்பட்டுள்ளது.
சுவாமிஜி எமக்கு கற்றுத் தந்த பாடங்கள் மற்றும் வழிகாட்டல்கள் எண்ணிலடங்காதவை. ஆயினும் வாசகர்களின் வசதிக்காக அவற்றில் மிக முக்கியமானவற்றை மாத்திரம் தெரிவு செய்து இங்கு வழங்கியுள்ளோம். இது நம்பவேண்டிய கோப்பாடல்ல, அனுபவிக்க வேண்டிய ஒளி. இதன் பக்கங்கள் வாசகனை நின்று சிந்திக்கவும், வாழ்க்கையின் புனித இசைநயத்தை மீண்டும் உணரவும் அழைக்கின்றன. ஒவ்வொருபகுதியும் தனித்தன்மை கொண்டது. அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்தால், அமைதியான நதிபோல் ஓடி, தெளிவு, சமநிலை, உள்ளார்ந்த நிறைவு நோக்கி வாசகனை வழிநடத்துகின்றன.
இந்த நூல் உள்ளே நோக்கிய பயணத்தின் ஒரு மௌனத் துணை. உண்மையான முன்னேற்றம் உலகை வெல்வதில் அல்ல, தன்னை வெல்வதில் உள்ளது என்பதை நினைவூட்டும் ஒளி. வெறுமனே பொருள் சேர்த்தலில் அல்லாது விழிப்புணர்விலும்; சத்தத்தில் அல்லாது அமைதியிலும் வாழ்க்கை நிறைவடைகிறது என்பதை மெதுவாக உணர்த்தும் வழிகாட்டி.
ஆசிர்வாதத்தின் அற்புதம் (Sheer Blessings) நம்பிக்கையை எழுப்பட்டும். சமநிலையை மீட்டுத் தரட்டும், ஞானத்தையும் கருணையையும் மனித உள்ளத்தில் மலரச் செய்யட்டும். நிலையான ஆனந்தம் நிறைந்த ஒரு உயர்ந்த வாழ்க்கைக்குத் தூண்டுகோலாக அமையட்டும்.




sajanthan –
good